திருநெல்வேலி குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில், பாளையஞ்சாலை குமாரசுவாமி கோயிலில் புதன்கிழமை இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
தமிழ்க் கடவுள் முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்வை கந்தசஷ்டி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருநெல்வேலியில் உள்ள முருகன்கோயில்களிலும் கந்தசஷ்டியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
திருநெல்வேலியில் தாமிரவருணி யின் கரையோரம் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா இம்மாதம் 8 ஆம் தேதி தொடங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. சூரசம்ஹாரம் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
திருக்கல்யாணம்: திருக்கல்யாணத்தையொட்டி, புதன்கிழமை காலை 8 மணிக்கு சி.என்.கிராமத்தில் வைத்து தவசுக்காட்சி நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு கோயில் வளாகத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பாளையஞ்சாலைகுமாரசுவாமி கோயில்: திருநெல்வேலி சந்திப்பில் பாளையஞ்சாலை குமாரசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி, மூலவருக்கு அபிஷேகம், சிறப்புஅலங்கார தீபாராதனை, கந்தபுராண தொடர் சொற்பொழிவு, பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் ஆகியன நடைபெற்றன.
புதன்கிழமை இரவு ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானை ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வியாழக்கிழமை (நவ.15) மற்றும் 16, 17 ஆம் தேதிகளில் ஊஞ்சல் திருவிழா நடைபெறுகிறது.