திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
திருநெல்வேலி நகரம் இந்து தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு ரோட்டரி சங்கத் தலைவர் ஜி. பரமசிவன் தலைமை வகித்தார். பள்ளிக்குழு உறுப்பினர் சு. சண்முகவேலன், ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதையொட்டி, நேரு படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. பள்ளிச் செயலர் சங்கரநாயகம், தலைமையாசிரியை கலைச்செல்வி மற்றும் வின்சென்ட் ஆண்டனி, வேலாயுதம், லோகாம்பாள், ஆசிரியர்கள் சுப்பிரமணியன், விஜயலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர். மாணவர்களுக்கு எழுது பொருள்கள் போன்றவை வழங்கப்பட்டன. கை கழுவுவதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பாளையங்கோட்டையில் பெருமாள்புரம் எக்ஸ்புளோர் மழலையர் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, தலைமையாசிரியை அனிதா தலைமை வகித்தார். பொம்மலாட்டம், கல்வி, நல்லொழுக்கம், பிளாஸ்டிக் தவிர்த்தல் ஆகிய தலைப்புகளில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பெற்றோர்களின் செல்லிடப்பேசி எண்கள், வீட்டு முகவரி ஒப்பித்தல் போட்டி நடைபெற்றன. இதில் பங்கேற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.