திருநெல்வேலி அருகேயுள்ள ரெட்டியார்பட்டியில் மாயமான ஒப்பந்ததாரர் மேலப்பாளையம் அருகே வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.
ரெட்டியார்பட்டி கார்த்திகேய நகரைச் சேர்ந்த பலவேசம் மகன் முருகன் (53). ஒப்பந்ததாரரான இவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு மாயமானார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் மேலப்பாளையம் அருகே ரோஸ்நகர் பகுதியில் முருகன் சடலமாகக் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மேலப்பாளையம் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முருகன் தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.