ஆலங்குளம் அருகே பார்வைத் திறனற்றவர் கொலை வழக்கில் சமையல்காரர் கைது செய்யப்பட்டார்.
ஆலங்குளம் அருகேயுள்ள பூலாங்குளத்தைச் சேர்ந்தவர் சு. சுப்பையா என்ற குமரேசன் (52). பார்வைத் திறனற்ற இவர், டாஸ்மாக் கடையில் மது வகைகள் வாங்கி, வெளியில் விற்றுவந்தாராம். இவர் கடந்த ஆண்டு டிச. 9ஆம் தேதி அங்குள்ள கடை முன் தலையில் காயத்துடன் இறந்துகிடந்தார். ஆலங்குளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்துவந்தனர். இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது.
தனிப்படை போலீஸாரின் விசாரணையில், குமரேசனைக் கொன்றவர் பூலாங்குளம், காளியம்மன் நகரைச் சேர்ந்த சமையல்காரரான ஆ. சுடலைமணி (45) எனத் தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்து ஆலங்குளம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தினர்.
சுடலைமணி போலீஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில், குமரேசனிடம் கடன் கேட்டபோது அவர் அவதூறாகப் பேசியதால், சம்பவத்தன்று கடை முன் தூங்கிக்கொண்டிருந்த குமரேசன் தலையில் கல்லைப்போட்டுக் கொன்றுவிட்டு, கோவைக்குச் சென்று சமையல் வேலை செய்துவந்ததாகவும், விடுமுறையில் ஊருக்கு வந்தபோது போலீஸாரிடம் பிடிபட்டதாகவும் கூறியுள்ளார்.