பணகுடி புறவழிச்சாலையில் ரூ.50 கோடி செலவில் 2 மேம்பாலம் கட்டும் பணிக்கான இடத்தை மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நிதித்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்களுடன் பணகுடி புறவழிச்சாலை பகுதிக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்தார்.
அப்போது, நெடுஞ்சாலைத் துறை மண்டல அலுவலர் மதர், திட்ட இயக்குநர் சரவணன், ஐ.ஸ்.இன்பதுரை எம்.எல்.ஏ., காவல்துறை ஆய்வாளர் அருண்குமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் மேம்பாலம் அமைக்க வேண்டிய பகுதிகளை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, பாஜக மாவட்ட பொதுச் செயலர் எஸ்.பி.தமிழ்ச்செல்வன், முன்னாள் மாவட்டத் தலைவர் கட்டளை ஜோதி, வியாபாரிகள் சங்கச் செயலர் எஸ்.ராஜ்குமார், பொருளாளர் முருகன், இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலர் சேதுராமலிங்கம், அதிமுக ஒன்றியச் செயலர்கள் வள்ளியூர் இ.அழகானந்தம், ராதாபுரம் அந்தோணி அமலராஜா, நான்குனேரி விஜயகுமார், பணகுடி லாரன்ஸ், மதிமுக சங்கர், முருகேசன், கல்யாணசுந்தரம், பாஜக செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியது: பணகுடி புறவழிச்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், புறவழிச்சாலையில் தெற்கு பகுதியிலும், வடக்கு பகுதியிலும் மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன. ரூ.50 கோடி செலவில் இப் பாலம் கட்டுமானப் பணி நடைபெறும். இதற்காக ஒப்பந்தப்புள்ளி கோருதல் உள்ளிட்ட பணிகள் முடிவடைந்து 45 நாள்களுக்குள் பாலம் கட்டும் பணி தொடங்கப்படும். பாலத்தையொட்டி இருபுறமும் மக்கள் பணகுடி ஊருக்குள் வந்து செல்ல அணுகுசாலை அமைக்கப்படும் என்றார் அவர்.