திருநெல்வேலி குறுக்குத்துறையில் தாமிரவருணி மகா புஷ்கரம் பந்தல் கால் நாட்டு வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
குருப்பெயர்ச்சியை முன்னிட்டு 144 ஆண்டுகளுக்கு பிறகு தாமிரவருணி நதியில் புஷ்கரம் விழா 143 படித்துறைகளிலும், 64 தீர்த்தக் கட்டங்களிலும் வரும் அக். 12 முதல் 23 ஆம் தேதி வரை 12 தினங்கள் நடைபெறுகிறது. இதையொட்டி, குறுக்குத்துறையில் தனியார் இடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பந்தல் கால் நாட்டு வைபவம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், மகா லட்சுமி அறக்கட்டளையைச் சேர்ந்த மகாலட்சுமி சுப்பிரமணியன், பாளையங்கோட்டை ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரியின் தாளாளர் சுவாமி பக்தானந்தா மகராஜ், மாநகராட்சி முன்னாள் மேயர் இ. புவனேஸ்வரி, மகராஜநகர் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் ஜெயந்திரன் வி. மணி, வலசை ஜெயராமன், தொழிலதிபர் மேகலிங்கம், தருமபுரம் ஆதீன மடம் மேலாளர் மகாலிங்கம், இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் எஸ். உடையார் உள்பட பலர் கலந்து கொண்டனர். புஷ்கரம் விழாவையொட்டி, 12 தினங்களும் ஹோமம், வேதபாராயணம், பக்தி கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறுகின்றன.