திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 39 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமை வகித்து, மனு அளிக்க வந்த பொதுமக்களிடம் துணி பையை பயன்படுத்துவது குறித்தும், பிளாஸ்டிக்கை தவிர்ப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், வழக்கம்போல் மாற்றுத்திறனாளிகளின் இருக்கைக்கு சென்று அவர்களின் கோரிக்கை மனுக்களை ஆட்சியர் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து, பாளையங்கோட்டை வட்டத்தில் 10 பயனாளிகளுக்கும், திருநெல்வேலி வட்டத்தில் 11 பயனாளிகளுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டாகளையும், 18 பயனாளிகளுக்கு தமிழக அரசின் பல்வேறு உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளையும் ஆட்சியர் வழங்கினார்.
பின்னர், மக்களிடமிருந்து முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, முதிர்கன்னி உதவித் தொகை, விபத்து மரண உதவித் தொகை, குடிநீர், சாலை வசதிகள் தொடர்பான பல்வேறு கோரிக்கை மனுக்களை மக்களிடமிருந்த பெற்றுக்கொண்ட ஆட்சியர், அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், திருநெல்வேலி கோட்டாட்சியர் இல.மைதிலி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் மாறன், வட்டாட்சியர்கள் (பாளையங்கோட்டை) கந்தசாமி, (திருநெல்வேலி) கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.