திருநெல்வேலியில் வெள்ளப் பெருக்கால் சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தாமிரவருணி ஆற்றில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால், மேலப்பாளையம் மண்டலப் பகுதிக்கு குடிநீர் அளிக்கும் கொண்டாநகரத்தில் பிரதான குழாய்கள் சேதமடைந்தன. இந்தக் குழாய்களைச் சீரமைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், மேலப்பாளையம் மண்டலத்தில் 28 முதல் 38 ஆவது வார்டு வரை குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், போர்க்கால அடிப்படையில் குழாய்களை சீரமைக்கும் பணியை மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். தற்போது மாற்று ஏற்பாட்டின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆகவே, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி ஒத்துழைக்க வேண்டும் என மக்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.