மக்களவைத் தேர்தலுக்கு முன் 7 பேரின் விடுதலை தொடர்பாக நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன் என்றார் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தமிழகம் முழுவதும் மக்களைச் சந்தித்து வருகிறார்.
திருநெல்வேலியில் மக்களைச் சந்திக்கும் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில், அற்புதம்மாள் கலந்துகொண்டு 7 பேரின் விடுதலை குறித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 7 பேரையும் விடுதலை செய்வது என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொள்கை முடிவு எடுத்தார். பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு இடையில் மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் மாநில அரசின் முடிவுக்கு விட்டுவிட்டது. அவர்கள் விடுதலை தொடர்பான கோப்புகள் ஆளுநர் மாளிக்கைக்கு வந்து 5 மாதங்களுக்கு மேலாகிவிட்டது.
இதுவரை ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார். ஆளுரை வற்புறுத்த சட்டத்தில் அதிகாரம் அளிக்கப்படவில்லை. இதன் காரணமாகவே நான் மக்களை சந்திக்கப் புறப்பட்டுவிட்டேன்.
28 ஆண்டுகாலம் சிறையில் இருக்கும் அவர்களின் வாழ்க்கை அழிந்துவிட்டது. இனிமேலாவது அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, 7 பேரை விடுதலை செய்ய ஆளுநர் கையெழுத்திட வேண்டும். மக்களவைத் தேர்தலுக்கு முன்பு 7 பேரின் விடுதலை குறித்து நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன் என்றார்.