காஷ்மீரில் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பேட்டையில் பொதுமக்கள் சார்பில் அமைதிப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
பேட்டையில் உள்ள மாநகராட்சி அரசு மருத்துவமனை முன்பிருந்து தொடங்கிய பேரணி திருநெல்வேலி-சேரன்மகாதேவி சாலை வழியாக செக்கடி பேருந்து நிறுத்தத்தை அடைந்தது. அங்கு வீரர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னாள் மாமன்ற உறுப்பினர் பொன்.அழகுராஜ், மாரியப்பன், முத்து, ரமேஷ், முத்துக்கிருஷ்ணன், மணி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பேரணியில் பங்கேற்றனர்.