தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அ.ஜெயசித்ரா அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் அமலில் உள்ளது. அதன்படி, 2018-19 ஆம் கல்வியாண்டுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன.
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ரூ.13 ஆயிரமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். 1-7-2017 முதல் 30-6-2018ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். குழுப் போட்டிகளாக இருந்தால் முதல் இரண்டு இடங்களையும், தனிநபர் போட்டிகளாக இருந்தால் முதல் மூன்று இடங்களையும் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேசிய அளவிலான போட்டிகளில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்கள், இந்திய பள்ளி விளையாட்டுகள் கூட்டமைப்பு, இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தேசிய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுஅமைச்சகம் மற்றும் அகில இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் ஆகியவற்றினால் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை இணையதளம் மூலம் சமர்ப்பிக்க மார்ச் 12 ஆம் தேதி கடைசிநாளாகும். இதுகுறித்த விவரங்களுக்கு 0462 2572632 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.