திருநெல்வேலியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை தர்னா நடைபெற்றது.
நிறுத்தப்பட்ட புறநகர் மற்றும் நகரப் பேருந்துகளை உடனடியாக இயக்க வேண்டும். போக்குவரத்துக் கழகங்களில் வரவுக்கும் செலவுக்கும் உள்ள வித்தியாச தொகையை அரசு வழங்கவேண்டும். 240 நாள் பணி முடித்த சேமநலன், தினக்கூலி தொழிலாளர்கள் அனைவரையும் நிரந்தரம் செய்ய வேண்டும். மாதந்தோறும் முதல் தேதி அனைவருக்கும் பாரபட்சமில்லாமல் ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணியிடை நீக்கம் போன்ற தொழிலாளர்விரோதப் போக்கைக் கைவிட வேண்டும்.
தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த ரூ. 8000 கோடியை உரிய கணக்கில் செலுத்த வேண்டும். அனைத்து பணிமனைகளிலும் புதிய பணி ஒதுக்கீடு, அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வண்ணார்பேட்டை போக்குவரத்துக் கழகப் பொது மேலாளர் அலுவலகம் முன் சிஐடியு திருநெல்வேலி மாவட்ட போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் தர்னாவில் ஈடுபட்டனர்.
தர்னாவுக்கு சிஐடியு மாவட்டத் தலைவர் டி. காமராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஆர். மோகன் போராட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினார். சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் எஸ். பெருமாள், மாவட்ட பொதுச் செயலர் ஜோதி, சம்மேளன குழு உறுப்பினர் சிவகுமார், தங்கதுரை ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மாவட்டப் பொருளாளர் சி. மணி நன்றி கூறினார்.