மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதலாவது ஆண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.24) நடைபெறுகிறது.
அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கமல்ஹாசன், சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 10.40 மணிக்கு வருகிறார். அங்கிருந்து தூத்துக்குடி-திருநெல்வேலி சாலையில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்குகிறார். பிற்பகலில் திருநெல்வேலி புறப்பட்டு வரும் அவர், மாலை 6 மணிக்கு பொதுக்கூட்ட மேடைக்கு வருகிறார்.