பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகை மதிப்பீட்டாளர்கள் சங்கம் சார்பில் திருநெல்வேலி சந்திப்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நகை மதிப்பீட்டாளர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பெருமாள் தலைமை வகித்தார். சங்க பொதுச்செயலர் டி.மகாராஜன் முன்னிலை வகித்தார். நகை மதிப்பீட்டாளர்களை வங்கி ஊழியர்களாக்கி அவர்களை பணி நிரந்தரம் செய்வது, காலமுறை ஊதியம் வழங்குவது, அனைவருக்கும் அடையாள அட்டை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், சங்க மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கே.செந்தில், சங்கப் பொருளாளர் ஜி.வேல்முருகன், சிஜடியூ மாவட்டச் செயலர் ஆர்.மோகன், மாவட்ட துணைத் தலைவர் எம்.சுடலை ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் எஸ்.மீனாட்சிசுந்தரம் நன்றி கூறினார்.