திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் உள்ள உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் செப்புத் தகடுகளை சேதப்படுத்தி திருட முயன்றவர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
மணிமூர்த்தீஸ்வரத்தில் தாமிரவருணி கரையோரம் 5 நிலை ராஜகோபுரம் கொண்ட அருள்மிகு உச்சிஷ்ட விநாயகர் கோயில் உள்ளது. இங்கு கடந்த 2016 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக் கோயில் கொடிமரத்தில் செப்புத் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.
சனிக்கிழமை காலையில் பணியாளர்கள் கோயிலுக்குச் சென்று பார்த்தபோது கோயிலின் கொடிமரத்தில் இருந்த செப்புத்தகடுகள் சேதப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றை திருடுவதற்காக மர்மநபர்கள் சேதப்படுத்தியிருக்கலாம் என தெரியவருகிறது. இதுகுறித்து தகவலறிந்த திருநெல்வேலி சந்திப்பு போலீஸார் விசாரணை நடத்தினர்.