திருநெல்வேலி பழைய பேட்டையில் ஆவணமில்லாமல் கொண்டு சென்ற 500 சேலைகளை பறக்கும் படையினர் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதனை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப் பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் பழைய பேட்டை சோதனைச் சாவடியில் வட்டார
வளர்ச்சி அலுவலர் சீனிவாசமுத்து தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சேது ராமலிங்கம், போலீஸார் அடங்கிய குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனையிட்டதில், பேட்டை கோடீஸ்வரன் நகரை சேர்ந்த அசோக் என்பவர் உரிய ஆவணமில்லாமல் 500 சேலைகள் சென்னைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் அவற்றை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.