ஆறுமுகனேரி, முக்காணி, ஆறுமுகமங்கலம், சேர்ந்தபூமங்கலம் பகுதி கோயில்களில் கார்த்திகை சோமவார வழிபாடு நடைபெற்றது.
ஆதிசங்கரரால் கணேச பஞ்சரத்னம் பாடப்பெற்ற ஆறுமுகமங்கலம் சுவாமி ஆயிரத்தெண் விநாயகர் கோயிலிலில் கார்த்திகை சோமவார வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. காலையில் கும்பபூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து, மஹா அபிஷேகம் மற்றும் சங்காபிஷேகம் நடைபெற்றது.
இரவு சுவாமி ஆயிரத்தெண்விநாயகர் பிரகார உலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை சுவாமி ஆயிரத்தெண்விநாயகர் தேவஸ்தான பூஜா ஸ்தானீகர் விக்னேஷ்வர பட்டர், தேவஸ்தான செயல் அலுவலர் மனோகரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
முக்காணி நதிக்கரை அருள்மிகு இராமபரமேசுவரர் சமேத அருள்மிகு பர்வதவர்த்தினி அம்பாள் கோயில் மற்றும் நவகைலாயத் தலமான சேர்ந்தபூமங்கலம் அருள்மிகு கைலாசநாத சுவாமி சமேத அருள்மிகு சௌந்தர்ய நாயகி அம்பாள் கோயில் ஆகியவற்றில் திங்கள்கிழமை காலை பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும், மாலையில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன. இதேபோல, ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி கோயிலிலும் கார்த்திகை சோம வாரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.