தூத்துக்குடியில் மாடுகளை திருடி சுமை ஆட்டோவில் ஏற்றிச் சென்ற மூன்று பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
ஆத்தூர், முக்காணி ரவுண்டானா அருகே திங்கள்கிழமை அதிகாலையில் சுமை ஆட்டோவில் இரு மாடுகளுடன் வந்த மூவர் அங்குமேய்ந்து கொண்டிருந்த மற்றொரு மாட்டை கயிறுகொண்டு இழுத்து வண்டிக்குள் ஏற்ற முயன்றனர். ஆனால் மாடு தப்பி சென்று விட்டதாம்.
அப்போது அவ்வழியாக ரோந்து வந்த போலீஸார் இவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்களாம். இதையடுத்து ஆத்தூர் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்ததில் இரு மாடுகளும் தூத்துக்குடி அருகே திருடியது என்றும், அவர்கள் மூவரும் கன்னியாகுமரி மாவட்டம் கண்ணூர் வேர்கிளம்பி சன்னிவிளையைச் சேர்ந்த கபீர் மகன் ஜாகீர் உசேன்(34), ஆரல்வாய்மொழி மூவேந்திரர் நகர் கன்னையா மகன் மகேந்திரகுமார்(43) மற்றும் மணலிக்கரை ஆண்டம்பாறை ஜெயசேகர் மகன் ஜனிஷ்(25) என்பதும் தெரியவந்தது. திருட்டு நடந்த இடம் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையப் பகுதி என்பதால், மாடுகள், சுமை ஆட்டோ மற்றும் 3 பேரையும் தூத்துக்குடி சிப்காட் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து வழக்குப் பதிந்த போலீஸார் அவர்கள் மூவரையும் கைது செய்தனர்.