தூத்துக்குடி மாவட்டம், தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோயிலில் கள்ளர்வெட்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை (டிச.16) நடைபெறுகிறது.
அடர்ந்த வனப் பகுதியில் பரந்து விரிந்த செம்மண் தேரியில் எழில்பாங்குடன் அமைந்துள்ளது அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோயில். இங்கு அய்யன் பூரணம், பொற்கலை ஆகிய இரு தேவியருடன் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்.
இப்பகுதியில் அநீதிகள் தலைதூக்கியபோது அதை அழித்து நீதியை நிலை நாட்டினார் அய்யன். அந்த நாளே கள்ளர்வெட்டு நாளாக கொண்டாடப்படுகிறது.
நிகழாண்டு இத்திருவிழா கடந்த நவ.17 ஆம் தேதி சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாள்களில் தினமும் அய்யனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
டிச.14 ஆம் தேதி பகல் 11 மணிக்கு ஐவராஜா-மாலையம்மனுக்கு பூஜை, மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனை நடைபெறும்.
டிச.15 ஆம் தேதி காலை 10 மணிக்கு மகளிர் வண்ணக் கோலமிடும் நிகழ்ச்சி, 11, 12 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மாலை 6 மணிக்கு மாவிளக்கு பூஜை, இரவு 7.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, 9 மணிக்கு உற்சவர் திருவீதியுலா நடைபெறும்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளர்வெட்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு அய்யனார் வழிபாட்டுக் குழு சார்பில் 108 பால்குட ஊர்வலம், 9 மணிக்கு தாமிரவருணி தீர்த்தம் எடுத்து வருதல், 10 மணிக்கு ஊர் எல்லையில் இருந்து அருள்மிகு கற்குவேல் அய்யனாருக்கும், பேச்சியம்மனுக்கும் முளைப்பாரி எடுத்து வருதல், 12 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.
மாலை 4 மணிக்கு கோயில் பின்புறமுள்ள தேரியில் கள்ளர்வெட்டு நிகழ்ச்சி நடைபெறும்.
இதில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.
தேரியில் புனித மண் எடுக்கும் பக்தர்கள் அதை தங்கள் வீடு தொழிலகம், விவசாய நிலங்களில் வைத்து வழிபடுவர்.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தி.பரஞ்ஜோதி, உதவி ஆணையர் சு.ரோஜாலி சுமதா, தக்கார் க.விஸ்வநாத், செயல் அலுவலர் சி.இசக்கியப்பன் மற்றும் ஆலயப் பணியாளர்கள் செய்துள்ளனர்.