கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நடைமேடை அருகே நடந்து சென்று கொண்டிருந்த பட்டதாரி இளைஞரை தாக்கி பணம் பறித்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவில்பட்டியையடுத்த முடுக்கலாங்குளம் நடுத் தெருவைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் சமுத்திரப்பாண்டியன் (21). பி.எஸ்.சி. பட்டதாரியான இவர், தூத்துக்குடியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் அரசுத் தேர்வுக்காக படித்து வருகிறாராம். இந்நிலையில் திங்கள்கிழமை மைசூர் - தூத்துக்குடி ரயிலில் செல்வதற்காக கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நடைமேடையில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவரை வழிமறித்த 3 மர்ம நபர்கள் அவரை தாக்கி அவரிடமிருந்த ரூ.2ஆயிரத்தை பறித்தனர். இதில் காயமடைந்த சமுத்திரப்பாண்டியன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.