கழுகுமலை அருகே குளிக்கச் சென்ற தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து இறந்தார்.
கழுகுமலையையடுத்த கரடிகுளம், வடக்குத் தெருவைச் சேர்ந்த தடிவீரன் மகன் மாயகிருஷ்ணன்(45). தொழிலாளியான இவர், கூலையத்தேவன்பட்டியில் உள்ள கிணற்றில் துணி துவைத்து, குளிப்பது வழக்கமாம். வியாழக்கிழமை காலை குளிக்கச் சென்றவர் திரும்பவில்லையாம். கிணற்றருகே துவைத்த நிலையில் அவரது உடைகள் இருந்தனவாம். தகவலின்பேரில் கழுகுமலை தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்று, கிணற்றில் பார்த்தபோது மாயகிருஷ்ணன் இறந்துகிடந்தது தெரியவந்தது. சடலம் மீட்கப்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. மாயகிருஷ்ணனுக்கு வலிப்புநோய் இருந்து வந்ததாகவும், குளிக்கும்போது வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்றும் அவரது உறவினர்கள் கூறினர். கழுகுமலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.