வேலவன்குளத்து நீரை வெளியேற்றுவதை கண்டித்து சாத்தான்குளத்தில் திங்கள்கிழமை (நவ. 19) நடக்கவிருந்த விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் ஒன்றியம் நெடுங்குளம் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் வேலன்புதுக்குளம் உள்ளது. தற்போது பெய்து வரும் மழைக்கு குளம் நிரம்பியுள்ள நிலையில், மர்மநபர்கள் அந்தக் குளத்தின் மறுகால் உறிஞ்சியை உடைத்து தண்ணீரை வெளியேற்றி விடுவதாக அதிகாரிகளிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். ஆனால், அதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதையடுத்து, விவசாயிகள் சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் முன் நவ.19இல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்ததால், சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ஞானராஜ் தலைமையில் சமாதானக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ராஜாசுந்தர், மூலைக்கரைப்பட்டி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர், மண்டல துணை வட்டாட்சியர் அகிலா மற்றும் போராட்டக்குழு சார்பில் நெடுங்குளம் முன்னாள் ஊராட்சித்தலைவர் பரசமுத்து, செட்டிக்குளம் குடிமராபத்து விவசாயிகள் சங்கத் தலைவர் மலையாண்டிபிரபு, வேலன்புதுக்குளம் தொழிலதிபர் சேதுராமபாண்டியன், செட்டிக்குளம் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கணேசன், தனுஷ்கோடி, சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், "வேலன்புதுக்குளம் நிரம்பிய நீர் மறுகால் வழியாக அப்பகுதி விவசாயிகளின் அனுமதியுடன் மற்ற குளங்களுக்கு உபரி நிரை வெளியேற்றுவது, குளத்தின் மறுகால் வழியாக முறைகேடாக தண்ணீர் வெளியேற்றுவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, பழுதடைந்துள்ள செக்கால் ஓடையைச் சீரமைப்பது' என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையேற்று, போராட்டத்தை கைவிடுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.