தூத்துக்குடியில் தனியார் அனல் மின்நிலைய கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த வெளிமாநில தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
தூத்துக்குடி துறைமுகம் செல்லும் வழியில் தனியார் நிறுவனம் சார்பில், அனல் மின்நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த பலர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், ஜார்க்கன்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனீஷ் ராம் (24), 70 அடி உயர புகைபோக்கி கோபுரத்தில் வியாழக்கிழமை இரவு வெல்டிங் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது கீழே தவறி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதற்கிடையே, கஜா புயல் கரையை கடந்தபோது பலத்த காற்று வீசியதால், போதிய பாதுகாப்பு இன்றி தொழிலாளி மனீஷ் ராம் தவறி விழுந்து உயிரிழந்ததாக சிஐடியூ தொழிற்சங்கத்தினர் குற்றஞ்சாட்டினர். மேலும், இறந்தவர் குடும்பத்துக்கு நிவாரண உதவி தொகை ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொழிலாளர்கள் பலர் அரசு மருத்துவமனையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தெர்மல் நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.