கஜா புயல் எச்சரிக்கையை மீறி தூத்துக்குடியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 154 விசைப்படகு உரிமையாளர்களுக்கு மீன்வளத் துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கஜா புயல் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 12ஆம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வந்தனர். இருப்பினும், சிலர் எச்சரிக்கையை மீறி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதற்கிடையே, கஜா புயல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து 35 படகுகள் கொச்சி துறைமுகத்தில் கரை ஒதுங்கின. மற்றவர்கள் தூத்துக்குடிக்கு திரும்பினர். இந்நிலையில், மீன்வளத்துறை சார்பில், தூத்துக்குடி தருவைகுளம் மீன் ஏலக்கூடத்தில் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பு பிரசுரத்தில், மீன்வளத்துறையின் எச்சரிக்கை அறிவிப்பை மீறி தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்துக்கு கீழ்படியாமல், மீன்பிடி தொழிலுக்கு சென்ற தருவைகுளத்தைச் சேர்ந்த 154 மீன்பிடி விசைப்படகுகள் மீன்வளத்துறையில் இருந்து மறு அறிவிப்பு வரும் வரை தொழில் முடக்கம் செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த படகுகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.