கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் குடியிருப்போர் பாதுகாப்பு மற்றும் நலச் சங்கத்தினர் திங்கள்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இனாம்மணியாச்சி ஊராட்சி வீரவாஞ்சி நகர் முதல் தெரு வடக்குப் பகுதியில் குடியிருப்பவர்களின் கழிவுநீர் சாலைகளில் செல்வதைத் தடுக்க வேண்டும் என்றும், நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் ஓடையில் இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட குடியிருப்போர்களின் கழிவுநீரும் செல்லும் வகையில் ஓடையை இணைக்க வலியுறுத்தி குடியிருப்போர் பாதுகாப்பு மற்றும் நலச் சங்கத்தின் தலைவர் கோபால்சாமி தலைமையில், அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் கோரிக்கை மனுவை உதவியாளர் முத்துப்பாண்டியிடம் அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட அவர், கோரிக்கை மனுவை ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர். போராட்டத்தில், சங்கச் செயலர் மாரியப்பன், பொருளாளர் ராஜேஸ்வரன் உள்பட அப்பகுதி பெண்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.