சிறையிலே கைதிகளாக இருந்தாலும் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டியது அரசின் கடமை என்றார் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு.
கோவில்பட்டியில் நடைபெற்ற விஸ்வகர்ம ஜயந்தி விழாவில் பங்கேற்ற பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வைகோ மீது கொலைப்பழி சுமத்தி திமுகவிலிருந்து வெளியேற்றினார்கள். மீண்டும் அங்கே போய் அவர் இணைவது தற்கொலைக்குச் சமம்.
பொதுவாகவே, சிறையிலே கைதிகளுக்கு என்ன அடிப்படை வசதிகள் தேவையோ அதை செய்ய வேண்டியது அரசின் கடமை என்பதைத்தான் சட்ட அமைச்சர் தன்னுடைய கருத்தாக சொல்லியிருந்தார். ஆனால் சிறையிலே சுக வாழ்க்கை வாழ்ந்தால் அனைவரும் அதை உதாரணமாக எடுத்துக்கொள்வார்கள் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்லி தவறுதலாக புரிந்துகொண்டு பேசியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
அமைச்சர் கடம்பூர் செ.ராஜு போலீஸ் பாதுகாப்பில்லாமல் தனியாக தொகுதி மக்களைச் சந்தித்து வரட்டும், அதன்பின்பு அவர் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்கிறேன் என்று டி.டி.வி.தினகரன் கூறியிருக்கிறார்.
அமைச்சர் என்கிற முறையில் எனக்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கடமையை செய்கிறார்கள். அதை நான் என்னுடைய பாதுகாப்பாக நினைக்கவில்லை என்றார்.