சொக்கலிங்கபுரத்தில் முறைகேடாக உள்ள 60 குடிநீர் இணைப்புகளை ஒன்றியஆணையர், வட்டார வளர்ச்சிஅலுவலர் தலைமையிலான அதிகாரிகள் திங்கள்கிழமை துண்டித்தனர்.
சாத்தான்குளம் ஒன்றியம், புதுக்குளம் ஊராட்சிக்குள்பட்ட சொக்கலிங்கபுரத்தில் முறைகேடாக அதிக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டதால் மோட்டார் மூலம் உறிஞ்சி குடிநீர் பிடிக்கப்படுவதால் தெருக் குழாய்களில் முறையாக குடிநீர் கிடைக்காமல் அக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து, ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் 160-க்கும் மேற்பட்டவர்களுக்கு முறைகேடாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், ஒன்றிய ஆணையர் செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி ஊ) நாகராஜன் ஆகியோர் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன், முதற்கட்டமாக 60 இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மீதமுள்ள குடிநீர் இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.