ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

ஸ்டெர்லைட் ஆலையை  மீண்டும் திறக்க வலியுறுத்தி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

ஸ்டெர்லைட் ஆலையை  மீண்டும் திறக்க வலியுறுத்தி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது,  ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி பாசன விவசாயிகள் முன்னேற்ற சங்கம்,  இடையர்காடு விவசாய சங்கம்,  ஆத்தூர் குளம் கஸ்பா அனைத்து விவசாயிகள் அபிவிருத்தி நலச்சங்கம் மற்றும் தாமிரவருணி தென்கால் நத்தைகுளம் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கம் ஆகியவற்றை சேர்ந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:
 ஸ்டெர்லைட் தொழிற்சாலை தனது சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தாமிரவருரணி பாசனக் கால்வாய்கள், குளங்களை சீரமைத்தல், வடிகால் ஓடைகளை பராமரித்தல் போன்ற பல்வேறு பணிகளை விவசாயிகளின் நலன்கருதி தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. இதனால், மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ள விவசாயிகளான நாங்கள் அனைவரும் பெரிதும் பயனடைந்து வந்தோம்.
  இன்னும் சில தினங்களில் பருவமழைக் காலம் தொடங்கி விவசாய சாகுபடி பணிகள் தொடங்கிவிடும்.  ஆனால் பல்வேறு இடங்களில் விவசாயத்திற்கு தண்ணீர் செல்லும் பாசனக் கால்வாய்கள், குளங்கள், வடிகால் ஓடைகள் தூர்ந்துபோய் கிடக்கிறது.  இதை சரிசெய்வதற்கான பணிகளை செய்வதற்கு முன்வந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலை திடீரென்று மூடப்பட்டுவிட்டதால் இந்தப் பணிகள் அனைத்தும் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. 
எனவே,   இதுபோன்ற பணிகள் தடையின்றி நடைபெறவும், விவசாயத்திற்கு தேவையான உரங்கள் தடையின்றி கிடைக்கவும்  ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மீண்டும் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com