கோவில்பட்டியில் 2ஆவது நாளாக நடைபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் போராட்டம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் முடிவுக்கு வந்தது.
பி.எஸ்.என்.எல். இல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத ஊதியத்தை வழங்காத பி.எஸ்.என்.எல். தலைமை நிர்வாகத்தைக் கண்டித்து பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம், தேசிய தொலைத் தொடர்பு ஊழியர் சங்கம், தமிழ்நாடு ஒப்பந்த ஊழியர் சங்கம் மற்றும் தமிழ் மாநில ஒப்பந்த ஊழியர் சங்கத்தினர் திங்கள்கிழமை காலை முதல் தொடர் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.
இந்தப் போராட்டத்தையடுத்து, பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பெரும்பாலான பணிகள் பாதிக்கப்பட்டது. பல்வேறு பணிகளுக்காக பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு வந்த வாடிக்கையாளர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமையும் 2ஆவது நாளாக பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பிற்பகல் 12.30 மணிக்கு கோரிக்கைகள் முடிவுக்கு வந்ததாக போராட்டக் குழுவினருக்கு வந்த தகவலையடுத்து போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் பிற்பகலில் இருந்து தொழிற்சங்கத்தினர் வழக்கம்போல் வேலைக்கு திரும்பினர்.