தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் இரு பெண்களிடம் நகையைப் பறித்துச் சென்ற வழக்கில், 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 16 பவுன் நகை மீட்கப்பட்டது.
சாத்தான்குளம் அருகேயுள்ள சுப்பராயபுரத்தை சேர்ந்தவர் சிவநேசன் மனைவி சித்திரைபூபதி(45). இவரிடம் முகவரி கேட்பதுபோல் நடித்து, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி சித்திரைபூபதி அணிந்திருந்த 8 பவுன் நகையைப் பறித்து சென்றனர்.
இதுபோல், அழகப்பபுரத்தில் மளிகை கடைக்காரர் குமாரவேல் மனைவி தங்கலதா(40), கடையில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்து தண்ணீர் பாக்கெட் வாங்குவதுபோல் நடித்த மர்மநபர்கள், அவர் அணிந்திருந்த 8 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனர். இச்சம்பவங்கள் குறித்து தட்டார்மடம், சாத்தான்குளம் போலீஸார் வழக்குப் பதிந்து மர்மநபர்களை தேடி வந்தனர்.
மேலும், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ராஜாசுந்தர் தலைமையில் தனிப்படை போலீஸார் , பொத்தகாலன்விளை விலக்கு பகுதியில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் துப்பு துலக்கி, மர்மநபர்களை அடையாளம் கண்டனர்.
இந்நிலையில், சாத்தான்குளம் பேருந்து நிலையம் அருகே தனிப்படை போலீஸாரிடம் அந்த மர்மநபர்கள் புதன்கிழமை சிக்கினர். போலீஸ் விசாரணையில், அவர்கள் இட்டமொழியை சேர்ந்த அ. விக்கி என்ற விக்னேஷ்(24), செ. சேகர்(25) ஆகியோர் எனவும், சித்திரைபூபதி மற்றும் தங்கலதாவிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் எனவும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்து, 16 பவுன் நகையையும் மீட்டனர். விக்னேஷ் உள்ளூரிலும், சேகர், சென்னையிலும் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்த விவரமும் தெரியவந்துள்ளது.