சாத்தான்குளம் அருகே தோட்டத்து முள்வேலியை சூறையாடியதை தட்டிக்கேட்ட விவசாயி தாக்கப்பட்டார். இதுதொடர்பாக தந்தை, மகன் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள ஞானியார்குடியிருப்பை சேர்ந்தவர் கனகராஜ் (52). இவருக்குச் சொந்தமான தோட்டம் அதே ஊரில் உள்ளது. இவரது தோட்டம் அருகில் அமுதுண்ணாகுடியை சேர்ந்த செல்லையா (65) என்பவரது தோட்டம் உள்ளது. இந்த இரு தோட்டத்துக்கு இடையே கனகராஜ் முள்வேலி அமைத்திருந்தாராம். இதில் செல்லையா தனக்கு பாத்தியப்பட்ட இடம் உள்ளதாக கூறி வந்ததால் அவர்களுக்குள் பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில், கனகராஜ் அமைத்திருந்த முள்வேலியை புதன்கிழமை செல்லையா அடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கனகராஜ், செல்லையாவிடம் தட்டிக்கேட்டதால் அவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செல்லையா மற்றும் அவரது மகன்கள் துரை, அருணாசலம், மணி, அங்கதன் ஆகிய 5 பேரும் கனகராஜை கல் மற்றும் கட்டையால் தாக்கினராம். இதில் காயம் அடைந்த அவர் சாத்தான்குளம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து கனகராஜ் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளர் ராஜாசுந்தர் வழக்குப் பதிந்து செல்லையா உள்ளிட்ட 5 பேரையும் தேடி வருகிறார்.