கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட க.ராமநாதபுரம் கிராம மக்களுக்கு குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் கயத்தாறு வட்டாட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் மாரியப்பன் தலைமையில், கட்சியின் வழக்குரைஞர் பிரிவு மாவட்டச் செயலர் ரவிக்குமார், மாவட்டப் பொறுப்பாளர் ஜெயபாசு, தொகுதிச் செயலர் தங்கமாரியப்பன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கயத்தாறு வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
போராட்டக் குழுவினர் வட்டாட்சியர் லிங்கராஜ், கயத்தாறு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் ஆவுடையப்பன் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து போராட்டக்குழுவினர் கலைந்து சென்றனர்.