கோவில்பட்டி நகரத்திற்கு உள்பட்ட நீர்வரத்து ஓடையில் உள்ள சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடைபெறும் என நல்லிணக்க பண்பாட்டுக் கழகம் மற்றும் 5ஆவது தூண் நிறுவனத்தினர் மற்றும் அனைத்துத் தொழிற்சங்கத்தினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி நகரத்திற்கு உள்பட்ட நீர்வரத்து ஓடையில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பலமுறை முறையிட்டும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படாததால் அனைத்துலக அனைத்து சாதி சமய நல்லிணக்க பண்பாட்டுக் கழகம், 5ஆவது தூண் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் புதன்கிழமை (செப்.26) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பரமசிவன் தலைமையில் திங்கள்கிழமை சமாதானக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், நல்லிணக்கப் பண்பாட்டுக் கழகத் தலைவர் மற்றும் 5ஆவது தூண் நிறுவனத் தலைவர் சங்கரலிங்கம், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க நிறுவனத் தலைவர் செல்லத்துரை, அண்ணா தொழிற்சங்க வட்டச் செயலர் ராமகிருஷ்ணன், ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க மாவட்டப் பொதுசெயலர் ராஜசேகர், 5ஆவது தூண் உறுப்பினர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ஓடைக்கடை தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும், கோவில்பட்டி கோட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் புதன்கிழமை (செப்.26) ஓடைக்கடைகளை ஆய்வு செய்யவுள்ளனர். இதனால் போராட்டத்தை கைவிடுமாறு வட்டாட்சியர் அறிவுறுத்தினார்.
ஆனால் தொழிற்சங்கத்தினர் நீர்வரத்து ஓடையில் உள்ள சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற பலமுறை மனு அளித்தும் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் புதன்கிழமை ஆய்வு என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்றும், எனவே திட்டமிட்டபடி புதன்கிழமை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.