தூத்துக்குடியில் தேசிய பசுமைத் தீர்ப்பாய குழுவிடம் மனு அளிக்க வந்த யாரும் தடுக்கப்படவில்லை என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
தூத்துக்குடியில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
ஸ்டெர்லைட் ஆலைக்குள் உள்ள தாமிரத்தாது உள்ளிட்ட ரசாயனப் பொருள்களை அகற்றுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தாமிரத்தாது வாங்குவோர் கிடைத்தவுடன் நிர்வாகம் முடிவு செய்த பிறகு ரசாயனப் பொருள்கள் அகற்றும் பணி தொடங்கும்.
தூத்துக்குடியில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமித்த ஆய்வுக் குழுவினர் பொதுமக்களிடம் மனு பெற்ற போது யாரும் தடுத்து நிறுத்தப்படவில்லை. கருத்துக் கேட்பின்போது ஏறத்தாழ 2500 மனுக்கள் வந்தன. பாதுகாப்பு கருதியே போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர். தூத்துக்குடி மக்களின் பிரதான குறைகளை குழுவினர் புரிந்து கொண்டனர். ஆய்வுக் குழு திரும்ப வருமா என்பது அவர்களின் முடிவு.
மலேசியா மணல் விவகாரத்தைப் பொருத்தவரை ஆன்லைன் மூலம் மணல் விற்பனைக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது. ஓரிரு நாள்களில் மணலை வெளியே கொண்டு செல்லும் பணி தொடங்கும். இதில், இடைத்தரகர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் என்றார் அவர்.
தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையில் பணியில் இருந்து வேலைவாய்ப்பை இழந்த மூவருக்கு மற்ற தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான ஆணையை ஆட்சியர் வழங்கினார்.