பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து கட்சி சார்பில் எட்டயபுரம் பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் குணசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலர் சேது, மார்க்சிஸ்ட் வட்டச் செயலர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் கல்வி பயின்ற அரசு உதவி பெறும் ராஜா மேல்நிலைப் பள்ளியை, அரசுப் பள்ளியாக மாற்றவும், பள்ளிக்கு அருகிலுள்ள அரசு புறம்போக்கு விளையாட்டு மைதானத்தை பள்ளி நிர்வாகம் தனி நபர்களுக்கு பத்திரப் பதிவு செய்ததை ரத்து செய்யவும் வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதில், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணைத் தலைவர் தமிழரசன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் ரவீந்திரன், எஸ்.டி.பி.ஐ. நகரச் செயலர் உமர் மைதீன், மனிதநேய மக்கள் கட்சி நகரச் செயலர் ஷேக் மைதீன், எழுத்தாளர் இளசை மணியன், பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.