தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மனநல மருத்துவர் எஸ்.சிவசைலம் தலைமை வகித்துப் பேசியதாவது: தேர்வு முடிவுகளை நினைத்து தேர்வுக்கு முன்பே மாணவர், மாணவிகள் பயம் கொள்ள வேண்டாம். அவ்வாறு பயந்தால் மனப்பதற்றம் ஏற்பட்டு மதிப்பெண் குறையும். தேர்வுக்கு முந்தைய இரவு ஏறத்தாழ 6 மணி நேரம் தூக்கம் அவசியம். விழித்திருந்து படிக்காமல் நன்றாக தூங்கி எழுந்தால்தான் நினைவாற்றல் அதிகரிக்கும். அதிகாலை எழுந்து படித்தால் மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.
தேர்வு எழுதுவதற்கு சற்று முன்பு வரை படிக்க வேண்டாம். அரை மணி நேரத்துக்கு முன்பு படித்து முடித்துவிட்டு தியானமோ, மூச்சுப் பயிற்சியோ மேற்கொள்ளலாம்.
நம்மால் முடியும் என்று நம்பிக்கையுடன் தேர்வு எழுத செல்லுங்கள். மனசக்திக்கு மிஞ்சிய சக்தி உலகில் ஏதும் இல்லை என்றார் அவர்.
நிகழ்ச்சியில், காரப்பேட்டை பள்ளி செயலர் செல்வராஜ், தலைமையாசிரியர் கணேசன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.