ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சாத்தான்குளத்தில் பொதுமக்கள் சார்பில் அமைதி பேரணி மற்றும் இரங்கல் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
பேரணிக்கு ஜும்மா பள்ளிவாசல் ஜமாஅத் துணைச் செயலர் சலீம் தலைமை வகித்தார். சாத்தான்குளம் டி.என்டிடிஏ புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப் பள்ளி தாளாளர் ஏ.எஸ். கிருபாகரன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் லட்சுமிநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சாத்தான்குளம் தூய ஸ்தேவான் ஆலயத்தில் இருந்து தொடங்கி பழைய பேருந்து நிலையம் வந்து நிறைவடைந்தது பேரணி.
இதையடுத்து பழைய பேருந்து நிலையம் காமராஜர் சிலை முன்பு வீரவணக்க இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சாத்தான்குளம் முன்னாள் பேருராட்சித் தலைவர் ஏ.எஸ். ஜோசப் தலைமை வகித்தார். மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்க தென் மண்டல அமைப்பாளர் திருநாவுக்கரசு, நகர ஜெயலலிதா பேரவை செயலர் அப்துல் சமது, தொழிலதிபர் சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மனித நேய நல்லிணக்க பெருமன்ற செயலர் மகா.பால்துரை, வழக்குரைஞர் ஆ.க. வேணுகோபால், மாவட்ட திமுக பிரதிநிதி அலெக்ஸ் புருட்டோ, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் து. சங்கர், மார்க்சிஸ்ட் ஒன்றியச் செயலர் கு. ஜெயபால், வர்த்தக சங்க செயலர் மதுரம் எஸ். செல்வராஜ், ஒன்றிய திமுக விவசாய அணி அமைப்பாளர் டேவிட் வேதராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உடன்குடியில்...
உடன்குடி, பிப். 17: உடன்குடி பிரதான பஜாரில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு, ஒன்றிய பாஜக தலைவர் திருநாகரன் தலைமை வகித்தார். நகர தலைவர் ஜெயக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் லங்காபதி, ஒன்றிய பொதுச்செயலர்கள் சிவந்திவேல், அழகேசன், ஒன்றிய வர்த்தகப் பிரிவு தலைவர் நாராயணன், மாவட்ட சார்பு அணித் தலைவர்கள் பரமசிவன், முத்துராஜன் தர்மலிங்கம், விஜயசங்கர், ஒன்றிய துணைத்தலைவர் சங்கரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பாஜக மாவட்ட செயலர் இரா.சிவமுருகன் ஆதித்தன் மற்றும் திரளான பாஜகவினர், பொதுமக்கள் ராணுவ வீரர்களின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.