காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் மரணமடைந்த தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே சவலாப்பேரியைச் சேர்ந்த சிஆர்பிஃஎப் வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரை, திமுக மகளிரணி மாநிலத் தலைவி கனிமொழி எம்.பி. புதன்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து, சுப்பிரமணியன் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மரியாதை செலுத்திய அவர், செய்தியாளர்களிடம் கூறியது: காஷ்மீர் சம்பவத்தில் பல வீரர்களை நாம் இழந்திருக்கிறோம். இது மிகவும் வருந்தத்தக்க ஒன்று. இவ்வளவு பெரிய விபத்து மற்றும் பெரிய தாக்குதல் நடைபெறும் வரை மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது என்கிற கேள்விக்கு அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும் என்றார் அவர்.
அப்போது, திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் கீதாஜீவன் எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் உடனிருந்தனர்.