கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் 29ஆவது வார்டு குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.
மங்கள விநாயகர் கோயில் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் முத்துகண்ணன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து இயக்கத்தை புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லட்சுமணப்பெருமாள் தொடங்கி வைத்தார். கோரிக்கையை வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பாதசாரிகள், வாகன ஓட்டுநர்களிடம் கையெழுத்தைப் பெற்று, அந்த கோரிக்கை மனுவை இம்மாதம் 25ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, மனு அளிக்கவிருப்பதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் முருகன், ஒன்றியச் செயலர் ஜோதிபாசு, நகரக் குழு உறுப்பினர்கள் சக்திவேல்முருகன், அந்தோணிசெல்வம், முருகன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் உமாசங்கர், இ.பி. காலனி ஆனந்த நகர் குடியிருப்போர் நலச் சங்கச் செயலர் முத்துராஜன் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.