மாற்றுத் திறனாளிகளுக்கு நாளை சிறப்பு முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வெள்ளிக்கிழமை (பிப். 22) வாக்காளர் அடையாள அட்டை பதிவுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் அனைவரும் நூறு சதவீதம் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளில் வாக்காளர் அடையாள அட்டை இதுவரை பெறாதவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்காக அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வெள்ளிக்கிழமை (பிப். 22) காலை 10 மணி முதல் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமில், மாற்றுத் திறனாளி அடையாள அட்டை மற்றும் நகல், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் நகல், இரண்டு புகைப்படம் ஆகிய சான்றுகளுடன் மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டு பயனடையலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.