தமிழக அரசின் தமிழ்செம்மல் விருது பெற்ற நாடார் மேல்நிலைப் பள்ளி ஆசிரியருக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற இணைச் செயலரும், மகிழ்வோர் மன்ற பொறுப்பாளரும், நாடார் மேல்நிலைப் பள்ளி ஆசிரியருமான ஜான்கணேஷுக்கு, தமிழக அரசின் 2018ஆம் ஆண்டுக்கான தமிழ்செம்மல் விருது வழங்கப்பட்டது. சென்னையில் விருதைப் பெற்ற ஜான்கணேஷ் கோவில்பட்டிக்கு புதன்கிழமை வந்தார். இதையடுத்து அவருக்கு வரவேற்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லட்சுமணப்பெருமாள் தலைமை வகித்தார். திருவள்ளுவர் மன்றத் தலைவர் கருத்தப்பாண்டி, செயலர் நம்.சீனிவாசன், துணைத் தலைவர் திருமலை முத்துசாமி, இந்திய கலாசார நட்புறவுக் கழக மாநிலத் தலைவர் தமிழரசன், இலக்கிய உலா நிறுவனர் ரவீந்தர், உரத்த சிந்தனையைச் சேர்ந்த சிவானந்தம் ஆகியோர் பாராட்டி பேசினர். ஜான்கணேஷ் நன்றி கூறினார்.