கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி, நோய் கண்டறியும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத் திட்டம், கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன் தலைமை வகித்து பேசுகையில், 2018 இல் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் காசநோய் கண்டறியப்பட்டு 443 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. "சிபிநாட்' எனும் அதிநவீன கருவி மூலம் காசநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார்.
காசநோயாளிகளின் உணவுமுறை குறித்து மருத்துவ அலுவலர் பூவேஸ்வரி, காசநோய் பாதித்தவர்களுக்கு அரசு வழங்கும் உதவிகள் குறித்து மாவட்ட நலக் கல்வியாளர் தங்கவேல் ஆகியோர் பேசினர். மேற்பார்வையாளர் காசிவிஸ்வநாதன், காசநோய் பார்வையாளர் மகேஷ், ஆய்வக நுட்பநர் ராஜகுமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ரோட்டரி சங்கத் தலைவர் ஆசியா ஃபார்ம்ஸ் பாபு வரவேற்றார். மேற்பார்வையாளர் இசக்கி மகாராஜன் நன்றி கூறினார்.