சாத்தூரில் இருந்து கோவில்பட்டிக்கு வரும் பேருந்துகளை ரயில் நிலையம் வழியாக இயக்க வேண்டும் என அமமுக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சூரியகலாவிடம் அமமுக நகரச் செயலர் நாகராஜன் அளித்த மனு: சாத்தூரில் இருந்து கோவில்பட்டிக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் இலுப்பையூரணி, வேலாயுதபுரம், சங்கரலிங்கபுரம், புறவழிச் சாலை, இளையரசனேந்தல் சாலை வழியாக அண்ணா பேருந்து நிலையம் வருகின்றன. இதனால் பொதுமக்கள், பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே, இந்த வழித் தடத்தில் இயக்கப்படும் பேருந்துகள் ரயில் நிலையம் வழியாக அண்ணா பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி பிப். 28 இல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.