வாக்காளர் பட்டியலில் பெயரை பதிவு செய்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்களுக்கு தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் இலவசமாக படகு சவாரி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1593 வாக்குச்சாவடிகளிலும் சனிக்கிழமை இம்முகாம் நடைபெற்றது.
இந்நிலையில், தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நடைபெறும் முகாமில், புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர விண்ணப்பிக்கும் 18 முதல் 20 வயதுள்ள அனைவரும் இலவச படகு சவாரிக்கு அனுமதிக்கப்படுவர் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.
அதன்படி, சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சனிக்கிழமை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில், சார்-ஆட்சியர் சிம்ரான் ஜீத் கலோன், உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு, மாநகராட்சி பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, வட்டாட்சியர் ஜான்சன் தேவசகாயம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முகாமின்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஏராளமானோர் திரண்டனர். அவர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பு குறித்தும், யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை அறியும் வகையில் வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், எனது வாக்கு, எனது உரிமை என்ற கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, சிறப்பு முகாமில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து வாக்காளர் பட்டியலில் பதிவு செய்த 18 முதல் 20 வயது உள்ளவர்களுக்கு படகு சவாரி செய்வதற்கான டோக்கன் வழங்கப்பட்டது. அவர்களில் விருப்பமுள்ளவர்கள் முத்துநகர் கடற்கரையில் படகு சவாரி மேற்கொள்ள இலவசமாக அனுமதிக்கப்பட்டனர்.
முதல் நாளான சனிக்கிழமை 200-க்கும் மேற்பட்டோர் காத்திருந்தது வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்தனர். தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையும் (பிப். 24) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.