தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே இளைஞரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
குரும்பூர் அருகே உள்ள அம்மன்புரம் திருவள்ளுவர்நகர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் முருகன் (எ) குட்டி முருகன்(32).
கட்டடத் தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவரது தந்தை இறந்துவிட்டார். தாய் ராஜவடிவு, மூத்த சகோதரி முத்துலெட்சுமி (33), தங்கை சரஸ்வதியுடன்(27) வசித்து வருகிறார்.
சனிக்கிழமை இரவு தனது வீட்டில் வெள்ளை அடித்துவிட்டு குளத்துக்கு குளிக்கச் சென்ற முருகன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே, அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் குளத்துக்கு குளிக்கச் சென்றனர்.
அங்கு முருகன் பலத்த வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து புகாரின்பேரில் குரும்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்தார்.
முருகனை வெட்டியவர் யார் என்று ஆய்வாளர் (பொ) பத்மகுமாரி விசாரணை நடத்தி வருகிறார்.