தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி டிஎம்பி காலனியை சேர்ந்தவர் சண்முகராஜா. அதே பகுதியில் வாகனங்கள் பழுதுநீக்கும் கடை நடத்தி வருகிறார்.
இவர் பழுது நீக்க வரும் வாகனங்களை கடை முன்பு நிறுத்தி வைப்பது வழக்கம்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 வாகனங்களின் கண்ணாடிகளை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து சேதப்படுத்திச் சென்றனராம்.
கார், ஆட்டோ, லாரி என அங்கு இருந்த அனைத்து வாகனங்களின் கண்ணாடிகளும் சேதப்படுத்தப்பட்டது குறித்து சண்முகராஜா தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொழில் போட்டி காரணமாக இந்த சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்றும், முதல்கட்ட விசாரணையில் அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து வாகனங்களின் கண்ணாடிகளை சேதப்படுத்திச் சென்றது தெரியவந்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.