தூத்துக்குடி மாவட்டத்தில் காணும் பொங்கல் தினத்தன்று சுற்றுலாத் தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காணும் பொங்கல் தினத்தன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகளவில் சென்று வரக்கூடிய சுற்றுலாத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சாதாரண உடைகளில் ஆண், பெண் காவலர்கள் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர்.
மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களை வேகமாக ஓட்டுவது, இருசக்கர வாகனத்தில் 2 நபருக்கு மேல் செல்வது, பொது இடங்களில் அமர்ந்து மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பொங்கல் திருநாள் மற்றும் காணும் பொங்கல் விடுமுறையில் மாவட்டத்தில் உள்ள முத்துநகர் கடற்கரை, நேரு பூங்கா, ராஜாஜி பூங்கா, ரோச் பூங்கா, கோவளம் கடற்கரை, தெர்மல்நகர் கடற்கரை, முயல் தீவு, தாளமுத்துநகர் கடற்கரை, கோரம்பள்ளம் குளம் மற்றும் அந்தோணியார்புரம், அகரம் தாமிரவருணி ஆற்றங்கரை, ஆலந்தலை கடற்கரை, திருச்செந்தூர் கோயில் கடற்கரை, காயல்பட்டினம் கடற்கரை, குலசேகரன்பட்டினம் கடற்கரை, மணப்பாடு கடற்கரை, மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில், ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில், பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் அரண்மனை, கழுகுமலை ஸ்ரீகழுகாசலமூர்த்தி கோயில், வேம்பார் கடற்கரை,செட்டிவிளை மணல் மாதா கோயில் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் பொதுமக்கள் பாதுகாப்பாக சென்று வர ஏதுவாக 2000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். காவல்துறை உதவிக்கு 9514144100 என்ற செல்லிடப்பேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.