தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் வேப்பலோடையில் கண்மாய் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்தனர்.
வேப்பலோடையைச் சேர்ந்த மாரியப்பன் மகன் முனியசாமி (40). கூலித் தொழிலாளி. இவர் புதன்கிழமை காலையில் அங்குள்ள கண்மாயில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த தீயணைப்புப்படையினர் மற்றும் போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தருவைகுளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்: விளாத்திகுளம் மீரான்பாளையம் தெருவைச் சேர்ந்த முனியசாமி மகன் பொன் செல்வம் (19). விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த இவர், புதன்கிழமை மாலையில் நண்பர்களுடன் கண்மாயில் குளித்துக் கொண்டிருந்த போது, நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த விளாத்திகுளம் போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.