தென்திருப்பேரை அருள்மிகு சந்தனமாரி அம்மன் சமேத அருள்மிகு பூதநாதர் சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலையில் கோயில் நடைதிறக்கப்பட்டு கும்பபூஜை, கும்பஆவாஹன பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் பூர்ணாஹுதி ஆகியன நடைபெற்றன. பிறகு, யாகபூஜையில் வைக்கப்பட்டிருந்த புனித நீரடங்கிய கும்ப கலசங்கள் கோயிலைச் சுற்றி எடுத்துவரப்பட்டு விமான கலசங்களுக்கு வருஷாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, தீபாராதனை நடைபெற்றது. பிறகு, சுவாமிக்கும், அம்பாளுக்கும் மகா அபிஷேகம் நடைபெற்று, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
இதை, சிவகாமிநாதன் தலைமையிலான சிவாச்சாரியர்கள் செய்தனர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா நடராஜபிள்ளை செய்திருந்தார்.