மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணி முதலிடத்தைப் பிடித்தது.
உலக சிலம்பம் விளையாட்டுச் சங்கம் சார்பில், மாநில அளவிலான சிலம்பம் போட்டி சென்னை ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்தில் அண்மையில் நடைபெற்றது. போட்டியில், மாநிலம் முழுவதும் இருந்து 700-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
இதில், தூத்துக்குடி மாவட்டம் கணேஷ்கா சிலம்பம் பயிற்சி பள்ளி மாவட்டச் செயலர் மணி கணேஷ் தலைமையில் 60 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில், 50 பேர் முதலிடத்தையும், 6 பேர் இரண்டாவது இடத்தையும் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தூத்துக்குடி அணி வென்றது.
வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு உலக சிலம்பம் விளையாட்டு சங்க நிறுவனர்-தலைவர் சுதாகரன், மகளிரணித் தலைவர் கீதா மதுமோகன் ஆகியோர் கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.